காதுமடல்களை செதுக்கிக் கொண்டு
கடக்கிற காற்று
கண்களுக்குப் பின்னால்
ஏதோ ராகத்தில் அசைகிறது.
தலைக்கு மேலே ஓடிய மேகம்
என்னை வாசலென நினைத்து
தெளிக்கிறது
விலைபேச முடியாத வாசத்தை
காற்றின் சிறகில் ஏற்றிக் கொண்ட
மழை
தள்ளாடித் தள்ளாடி சிதறுகிறது
மண்ணின் தாகங்களிலெல்லாம்
முடிவும் தொடக்கமுமற்றுப்போன
ஈரத்தின் ஆனந்தத்தில்
நதி நெடுக
ராட்டினமாடி விளையாடுகின்றன
மழையின் சுவடுகள்
பின்
துளிகளோடு பொழிந்து
நீலம் வெளுத்துக் கிடக்கும்
வானத்தை
வாசல் பள்ளத்தில்
கடக்கிற போதெல்லாம்
காலுக்கடியில்
மறுகுகிறது மனது
மற்றுமொரு மழைக்காய்.
— (தேன்மொழி, ’அநாதி காலம்’)